கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகுச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் கண்டு களிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்காகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடல் நீர் மட்டம் குறைவு, சூறைக் காற்று என்று பல்வேறு காரணங்களைக் காட்டி அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாட்களில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் கண்டுகளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகுச் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.