நாமக்கல், சேலம் மாவட்டங்களில் வியாழக்கிழமை பிடிபட்ட வெளிமாநில கொள்ளையர்களுக்கு மதுரை ஏடிஎம் கொள்ளையிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தததை அடுத்து தனிப்படை போலீஸார் நாமக்கல் விரைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் அய்யங்கோட்டை பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கேஸ் கட்டிங் கருவி மூலம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.1.95 லட்சத்தை திருடிச்சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை டிசம்பர் 13-ஆம் தேதி இரவு கேஸ் கட்டிங் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயன்றபோது ஆள்கள் வந்ததால் தப்பிச்சென்றனர். இதுதொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் டிசம்பர் 10-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் ரூ.24 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் கேரளத்தில் இருந்து நாமக்கல் தப்பிச்செல்வது தெரிந்தது.
இதையடுத்து நாமக்கல் போலீஸார் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச்செல்ல முயன்ற நிலையில் பாலப்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் 5 பேரை போலீஸார் பிடித்தனர்.
மேலும் இதே கும்பலைச் சேர்ந்த 3 பேர் சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிடிபட்டனர்.விசாரணையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளையர்கள் என்பது தெரிந்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடித்தவர்கள் என்பதையும், மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.1.95 லட்சம் கொள்ளையடித்ததையும், நாகமலைபுதுக்கோட்டையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஏடிஎம் கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீஸார் நாமக்கல் விரைந்துள்ளனர்.