சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஞாயிறன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்ரா தலைமையில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ,
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர். ஆளும்கட்சிக்கு தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையும் திட்டமிட்டு உடந்தையாக உள்ளனர்.
புகார் கூறுவதன் மூலம் ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தி.மு.க. முறையிடவில்லை. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளைக் களைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் நோக்கம்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.