ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (டிச. 19) வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இம்மாவட்டத்தை தமிழக, மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டுச் சென்றனர். தமிழக முதல்வர் வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 12) முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தார். மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று, புயலால் இறந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே, இம்மாவட்டத்தை பிரதமர் பார்வையிட்டு, பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், கேரளம், லட்சத்தீவுகள் ஆகியவற்றை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (டிச. 19) பார்வையிடுகிறார். இதற்காக அவர் தில்லியிலிருந்து 18 ஆம் தேதி விமானம் மூலம் கொச்சி வருகிறார்.
அங்கு இரவில் ஓய்வெடுக்கும் அவர், 19ஆம் தேதி காலை லட்சத்தீவு செல்கிறார். பிற்பகலில் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். இங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார்.
மாலையில் திருவனந்தபுரம் சென்று, அங்கு புயல் பாதிப்புகளைப் பார்வையிடுகிறார். பிரதமரின் இந்தச் சுற்றுப்பயணத்தின்போது புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.