புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள லெம்பலக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
லெம்பலக்குடி அழகியதேவி அம்மன் கோயில் சந்தனக்காப்பு விழாவையொட்டி இப்பகுதியில் உள்ள கண்மாய் திடலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர்.
காளைகளை அடக்கியோரில் காயமடைந்த ஒருவருக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். பாதுகாப்புப் பணிகளில் நமணசமுத்திரம் போலீஸார் ஈடுபட்டனர்.