குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு புதன்கிழமையுடன் முடிவடைகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 9 ஆயிரத்து 351 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 14-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒக்கி புயல் பாதிப்பு உள்பட சில காரணங்களுக்காக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (டிச. 20) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு மேல் காலநீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்பதால், புதன்கிழமை இரவு 11.59 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுக் கட்டணத்தை வியாழக்கிழமைக்குள் செலுத்தலாம். இதுவரை குரூப் 4 தேர்வு எழுத 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், விவரங்களை WWW.TNPSC.GOV.IN என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.