சென்னை: ஜெயலலிதா சிகிச்சை விடியோவினை வெளியிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட விடியோவை, டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த விடியோ வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்துக் கூறிய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஒரு கட்சிக்கு தலைவராக இருந்தவரின் விடியோ வெளியாகியிருப்பது பரப்புரையாகவே கருதப்படும். நேற்று மாலையுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில், இன்று இந்த விடியோ வெளியிடப்பட்டிருப்பது விதி மீறல் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை விடியோவினை வெளியிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு அளித்துள்ள உத்தவில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது, சட்டப்பிரிவு 128 பி -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால், ஏற்கனவே பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதன் காரணமாக என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.