மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த ஆளுநரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் ஆகியோர் மாலை அணிவித்து பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் அம்மன் சன்னதியில் அமர்ந்து தரிசனம் செய்த ஆளுநர் தொடர்ந்து சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள சுழலும் லிங்க ஓவியத்தை பார்த்து ரசித்தார். அம்மன், சுவாமி சன்னதிகளில் ஆளுநர் தரிசனம் செய்தபோது ஓதுவார்கள் தமிழ்ப் பாசுரங்களைப் பாடினர்.
ஆளுநருக்கு சுந்தரேசுவரர்-மீனாட்சியம்மன் திருக்கல்யாண சிற்பத்தையும், ஆழி சிற்பங்களையும் ஆட்சியர் உள்ளிட்டோர் விளக்கினர். பின்னர் கோயில் உள்துறை அலுவலகம் எதிரே அமர்ந்த ஆளுநருக்கு கோயில் சார்பில் மீனாட்சி திருவுருவச் சிலை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஆளுநர் வருகையை முன்னிட்டு அம்மன், சுவாமி வெளிப்பிரகாரத்தில் உள்ள தெய்வங்கள் வெள்ளிக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோயிலுக்கு காலை 9.10 மணிக்கு வந்த ஆளுநர் காலை 10.20 மணிக்கு சாமி தரிசனத்தை நிறைவு செய்து புறப்பட்டார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு திருக்கோயில் மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மதுரையிலிருந்து அவர் காரைக்குடிக்கு புறப்பட்டுச்சென்றார்.