பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள கேரள பரம்பிக்குளம் வனத் துறையின் தகவல் மையத்தை அம்மாநில வனத் துறை அமைச்சர் கே. ராஜு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
கேரளம் மாநிலம், பரம்பிக்குளத்தில் வனச் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் பொள்ளாச்சியில், மீன்கரை சாலையில் கேரள அரசு ரூ. 2 கோடி மதிப்பில் சுற்றுலாத் தகவல் மையத்துகான புதிய கட்டடத்தை கட்டியுள்ளது.
இந்த சுற்றுலா மையத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கேரள வனத் துறை அமைச்சர் கே. ராஜு இம்மையத்தைத் திறந்துவைத்தார். அம்மாநிலத்தைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இது குறித்து கேரள வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த மையத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தங்கும் வசதியுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வனத் துறை, இயற்கை சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் குறித்த தகவல்களை இங்கு பெறமுடியும் என்றனர்.