அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட சென்னையில் 6 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த நவம்பர் 10-ஆம் தேதி சசிகலாவின் உறவினர் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் புதன்கிழமை சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் திடீர் சோதனையை வருமானவரித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சோதனை: சசிகலா உறவினர் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் இல்லம் உள்பட சென்னையில் 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள கார்த்திகேயனின் இல்லம், பள்ளிக்கரணை, தியாகராய நகர், வடபழனி ஸ்ரீசாய் கார்டன்ஸ், படப்பையில் உள்ள மிடாஸ் ஆலை உள்ளிட்ட 6 இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர கோவை அருகே மைலேரிபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.
போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தொடர்பான புகாரில், கடந்த நவம்பர் மாதம் 4 நாள்கள் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையை வருமான வரித் துறையினர் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது