மலேசியாவுக்குள் நுழைய விடாமல் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு அந்த நாட்டு அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவுக்குள் செல்ல விடாமல் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 2017 ஜூன் 9-ஆம் தேதி வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திலிருந்து வைகோவுக்கு வந்துள்ள கடிதம்:-
கோலாலம்பூர் விமான நிலையத்தில் தங்களுக்கு (வைகோ) நேர்ந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருந்தீர்கள். இந்தப் பிரச்னை குறித்து கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம், மலேசிய நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு தனது கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்து உள்ளது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும், புதுதில்லியில் உள்ள மலேசிய நாட்டின் தூதரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து நடந்த சம்பவத்துக்கு இந்திய அரசின் ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.