கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவுக்கு அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் எறிந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை கரை திரும்பினர். படகுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.