மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் இலவச மிதிவண்டிகள் சரியாக இயங்காததால், அவற்றை பழுது நீக்கும் கடைகளுக்கு மாணவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள கருங்குழி, வேடந்தாங்கல், அச்சிறுப்பாக்கம், எலப்பாக்கம், மொறப்பாக்கம், தொழுப்பேடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மிதிவண்டிகளில் உள்ள பெரும்பாலான பாகங்கள் சரியாக பொருத்தப்படாமலும், இயங்காமலும் உள்ளன. குறிப்பாக டயர், சக்கரம் போன்றவை இயங்காததால் மிதிவண்டிகளை இயக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், அவற்றைச் சரி செய்ய பழுது நீக்கும் கடைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஒருமுறை பழுது பார்த்தால், ரூ. 500-க்கு மேல் செலவாகிறதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
எனவே, அரசு சார்பில் இலவசமாக வழங்கி வரும் மிதிவண்டிகளை தரமுள்ள வகையில் வழங்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.