புதுச்சேரியிலும் அங்கீகாரமில்லா வீட்டுமனைகளின் பத்திரப் பதிவுக்கு இடைக்கால தடை

புதுச்சேரியிலும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியிலும் விளை நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விளை நிலங்களை வீட்டுமனைகளாக "லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது, அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத் துறையினர் எந்தவித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என கடந்தாண்டு செப்டம்பர் 9 -இல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோன்று, புதுச்சேரி மாநிலத்திலும் விளை நிலங்களை வீட்டுமனைகளாகப் பதிவு செய்ய தடை விதிக்க கோரி, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விவசாய விளை நிலங்களை வீட்டுமனைகளாக்குவது தொடர்ந்தால், 3 ஆண்டுகளில் 20 சதவீத அளவுக்கு மட்டுமே விவசாய நிலங்கள் மீதம் இருக்கும். எனவே, விளை நிலங்களை வீட்டுமனைகளாக்குவதையும், கடற்கரை ஓரங்களில் கட்டடங்கள் கட்டுவதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான புதுச்சேரி அரசு வழக்குரைஞர், விவசாய விளை நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு மாநில அரசு அனுமதிப்பதில்லை. இருப்பினும், புதிய சட்டம் இயற்றும் வரை பத்திரப் பதிவில் ஏற்படும் எதிர்கால சிக்கல்களை தவிர்ப்பதற்காக, தமிழகம் போன்று அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், புதுச்சேரியிலும் அங்கீகாரமில்லாமல் வீட்டுமனைகளின் பத்திரப் பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com