தமிழகத்தில் பொது இடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கழிப்பறை அமைக்கக் கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக செம்பியம் பகுதியைச் சேரந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: கடந்த 2011 -ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 10 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொது இடங்களில் தனி கழிப்பறை வசதிகள் கிடையாது. அவர்களுக்கு தனியாக பொது கழிப்பறை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் கருத்தை கோரியுள்ளதாகவும், மனுவுக்குப் பதிலளிக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், மிக முக்கியமான இந்த பிரச்னையில் பிற நாடுகள் மற்றும் சர்வதேச அளவிலான விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விதிகளை தாக்கல் செய்ய வழக்குரைஞர் தேவபிரசாத்தை, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமித்து உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.