காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரான கண்ணன் என்ற தாமோதர கண்ணன், மதுரை மாவட்டம் கே.வெள்ளங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அண்மையில் ஜம்மு- காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு என ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சசிகலா இரங்கல்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணத்துக்கு
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மதுரை மாவட்டம் கே.வெள்ளாகுளம் ஊராட்சியைச் சேர்ந்த கே.தாமோதர கண்ணன், காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தனது அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.