புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸின் பணிமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி மாணவிகள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள அரசு பாரதிதாசன் மகளிர் கலை கல்லூரியில் 2500-க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி முதல்வராக சசி காந்த தாஸ் என்பவர் கடந்த 2 வருடமாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தற்போது லாஸ்பேட்டை பகுதியில் உள்ள தாகூர் அரசு கலை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காரைக்கால் அண்ணா கலைக்கல்லூரி முதல்வர் பூங்காவனம் பாரதிதாசன் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளாராம்.
இந்த பணி மாற்றத்திர்ற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் அரசு கலை கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் .
இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது: எங்கள் முதல்வர் இருந்தவரை மாணவிகள் அவரை சந்தித்து கோரிக்கைகளை வைத்தால் உடனடியாக நிறைவேற்றுவார், மேலும் விளையாட்டு , நூலக புத்தகங்கள் அதிகரிப்பு , மாணவிகளின் கல்வி தரம் உட்பட கல்லூரியின் தரம் அவர் இருந்தபோது உயர்ந்தது.
ஆதலால் எங்களது முதல்வரை மாற்ற கூடாது என்றும் அவரை எங்கள் கல்லூரிக்கே மீண்டும் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாங்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளில் பாரதிதாசன் கல்லூரியில் முதல்வர் சசிகாந்த தாஸ் முயற்சியால் கட்டமைப்பு வசதிகள் பெருகி உள்ளன. மேலும் நாக் தர நிர்ணயக் குழுவின் அங்கீகாரத்துக்கு தேவையான பணிகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். மாணவியருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் துணை பாடப்பிரிவுகளையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் அவரை திடீரென பணியிட மாற்றம் செய்தது மாணவிகளை கொதிப்படையச் செய்துள்ளது.
இதுகுறித்து கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:
பெண்கள் கலைக்கல்லூரி பெண் முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இம்மாறுதல் மேற்கொள்ளப்பட்டது. போராட்டம் நடத்தும் மாணவிகளிடம் உயர்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்.