புதுதில்லி: மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்திருந்த தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினர்.
அதன் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 23-ம் தேதியன்று நடைபெற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தொடர்பான மாணவர்களின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
பின்னர் தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற ஜல்லிக்கட்டு சட்டம் இன்று முறையாக அரசிதழில் வெளியிடப்பட்டது.