சென்னை: அதிமுகவின் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து, கழகப் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழக அமைப்புச் செயலாளர்களாக கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, முன்னாள் அமைச்சர் B.V.ரமணா, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் வரகூர் அ.அருணாசலம், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், P.M.நரசிம்மன் எம்.எல்.ஏ., முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எஸ். நிறைகுளத்தான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.அண்ணாமலை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.உமாதேவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோர் கழக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராகவும், என்.முருகுமாறன் எம்.எல்.ஏ. கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக மீனவர் பிரிவு செயலாளர்களாக அமைச்சர் டி.ஜெயக்குமாரும், கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்களாக நீலாங்கரை எம்.சி.முனுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன், முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச் செல்வன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைக் கழகப் பேச்சாளர் டாக்டர் கோ.சமரசம் கழக இலக்கிய அணி இணைச் செயலாளராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.செல்வம் கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., கழக மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நீலாங்கரை எம்.சி.முனுசாமி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., தொடர்ந்து செயலாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.