கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேரை, இலங்கை கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 900 பேர் 241 விசைப்படகுகளில் புதன்கிழமை அதிகாலை மீன் பிடிக்கச் சென்றனர். வழக்கம் போல இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நெடுந்தீவு பகுதிக்கு நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த படகின் உரிமையாளரான ஜெகதாப்பட்டினம் பொ. ராமையன் (55),இவரது மகன் ரா. விவேகானந்தன் (25), ரா. சேகர் (35), ஆ. சுப்பையா (40), கி. செல்லதுரை (60) ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்து, படகுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றனர்.
கடந்த 3 மாதங்களில், இதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.