வேலூர் அரசு மருத்துவமனையில் ஒன்றரை மாத ஆண் குழந்தைக்கு நுரையீரல் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காட்பாடி அருகே செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஜெயக்குமார், மலர்க்கொடி தம்பதிக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பிரசவத்தில் ஆண் குழந்தை
பிறந்தது.
இக் குழந்தை பிறந்தது முதலே மூச்சு விட சிரமப்பட்டதோடு, தாய்ப்பால் குடிக்க முடியாமல் சோர்வடைந்து காணப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவர்கள் பலரிடம் காண்பித்தும்
குணமாகவில்லை.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழுந்தைக்கு, குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் எ.தேரணிராஜன் சிகிச்சை மேற்கொண்டார். அதில் இடது மேல்புறமுள்ள நுரையீரல் வீங்கி இருப்பது தெரியவந்தது. பொதுவாக 30,000 குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோன்ற நோய் பாதிப்பு ஏற்படுமாம். வேலூர் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நுரையீரல் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 17-ஆம் தேதி குழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணர் கோபிநாத், மயக்கவியல் மருத்துவர்கள் தென்றல் அரசு, கோமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் இரண்டரை மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நுரையீரலை அகற்றினர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வீட்டிற்கு அனுப்பு வைத்தனர். முதல் முறையாக நுரையீரல் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களை முதல்வர் உஷா சதாசிவம் பாராட்டினார்.