காதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முருகையன்-மல்லிகா தம்பதியின் மகள் பிரமிளா (20). கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் பிரிந்ததால், அவர் தாத்தா கண்காணிப்பில் திருச்சியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். அவர் நாள்தோறும் பயணித்த தனியார் பேருந்தின் நடத்துநர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (27) என்பவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
எ.புதூர் பகுதியிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விரக்தியில் இருந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில், பிரமிளாவை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதற்காக 2 ஆண்டு சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், தற்கொலைக்கு தூண்டியதற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக பூங்கோதை ஆஜராகினார். இதையடுத்து, தாமரைக்கண்ணன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.