"பீட்டா' அமைப்பை தடை செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உணவக ஊழியர் திணேஷ் தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆபாசமான படங்களை "பீட்டா' அமைப்பின் இணையதளம் பதிவேற்றம் செய்து வருகிறது. எனவே, பீட்டா அமைப்பு, அதன் இணையதளத்தைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
12-ஆம் வகுப்பு வரை படித்து, உணவகத்தில் பணிபுரியும் மனுதாரர் பீட்டாவின் இணையதளத்தை கட்டாயம் பார்ப்பதற்கான காரணிகள் ஏதும் இல்லை. இருப்பினும், அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்கள் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளதாலேயே, இந்த வழக்கை தொடருவதற்கு குறிப்பிட்டுள்ளார். அதுபோன்று ஆட்சேபகரமான எந்த விளம்பரமும் இடம்பெறவில்லை. "பீட்டா' அமைப்பு சட்ட விதி மீறலில் ஈடுபட்டிருந்தால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்ன சட்டத்தின் கீழ் இதை தடை செய்ய ஆணை பிறப்பிக்க முடியும் என்பதை மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் தெரியப்படுத்த வேண்டும். மாறாக, "பீட்டா' தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது என்று மனுதாரரின் வழக்குரைஞர் குற்றஞ்சாட்டுவது, உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றாகும்.
இந்த வழக்கை தொடுப்பதற்கு மனுதாரருக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தற்போதுள்ள சூழ்நிலையால் மனுதாரர் விளம்பரம் தேட முயற்சிக்கிறார். எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.