ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு கடற்கரைப் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த 100 கிலோ உயிருள்ள கடல் அட்டைகளை வியாழக்கிழமை வனத்துறையினர் கைப்பற்றி கடலில் விடுவித்தனர்.
மண்டபத்தில் உள்ள தெற்கு கடற்கரைப் பகுதியில், பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 100 கிலோ அளவுள்ள கடல் அட்டைகள் மீன்பிடி வலையால் மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மண்டபம் வனச்சரகர் சதீஷ்,வனக்காப்பாளர்கள் முனியசாமி, ராதா ஆகியோர் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இது தெரியவந்தது. இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டபோது, வனத்துறை அதிகாரிகளை பார்த்ததால் கடத்தல்காரர்கள் கடல் அட்டைகளை போட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் அட்டைகள் அனைத்தும் உயிருடன் இருந்ததால், அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி அவற்றை கடலுக்குள் விடுவித்தனர்.
அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகளை பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.