லஞ்ச வழக்கில் இசைவு ஆணை வழங்கிய உள்துறை கூடுதல் செயலர் நீதிமன்றத்தில் ஆஜர்

நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் மீதான லஞ்ச புகார் விசாரணைக்கு இசைவு ஆணை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் புஹ்ரீல், திண்டுக்கல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.

நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் மீதான லஞ்ச புகார் விசாரணைக்கு இசைவு ஆணை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் புஹ்ரீல், திண்டுக்கல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாளராக தேவராஜ் என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு பணியாற்றி வந்தார். அப்போது நெல் கொள்முதல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சீ.ரகுலன் என்பவர், பழனி பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை இந்த நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கியில் இருப்பு வைத்துள்ளார்.
பின்னர், நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல முயன்ற போது, ரகுலனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக, தேவராஜ் கேட்டுள்ளார். இதுகுறித்து ரகுலன், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் தேவராஜ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் மீது விசாரணை நடத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநர் புஹ்ரீல் இசைவு ஆணை வழங்கினார். இவர், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவராஜ் மீதான வழக்கு, திண்டுக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடர இசைவு ஆணை வழங்கிய புஹ்ரீல், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.அசோகன் முன்னிலையில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மார்ச் 7 ஆம் தேதிக்கு நீதித்துறை நடுவர் ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com