மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார்.
திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:
மத்திய அரசின் 2017-18-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயன்படும் நிதிநிலை அறிக்கையாக இல்லை. மாறாக, மக்களுக்கு பயன்படாத நிதிநிலை அறிக்கையாகும்.
இந்தியா முழுவதும் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆனால், விவசாயத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை. பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும்.
ரயில் கட்டண உயர்வு இல்லை என்றாலும் கூ,ட பலமுறை மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கும், திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்த்தியம்பள்ளிக்கும், மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கும் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்ற, போதிய நிதி ஒதுக்கியதாகத் தெரியவில்லை. ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றார்.