மறைந்த முதல்வர் அண்ணாவின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
அண்ணா நினைவிடத்துக்கு காலை 10 மணிக்கு வருகை தந்து சசிகலா அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கு கூடியிருந்த அதிமுகவினரை பார்த்து கை கூப்பி வணங்கினார். அதைத் தொடர்ந்து, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், நிர்வாகிகள் சி.பொன்னையன், கே.ஏ. செங்கோட்டையன், பா. வளர்மதி, பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.