சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சென்னை மெரினா கடற்கரையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பின்னர் 23-ஆம் தேதி காலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வன்முறையை பிரயோகித்து கலைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 12-ஆம் தேதி வரை அமலில் இருக்குமென்று அறிவிக்கபப்ட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதால் தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாகவும், ஆனால் சென்னை மாநகர் காவல் சட்டப் பிரிவு 41-ன் படி மக்கள் அனுமதியின்றி கூடுதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.