பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பது கண்டனத்துக்குரியது என்றும் இதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
ஆற்றுநீர் பகிர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மீறி வரும் ஆந்திர அரசு, அடுத்தகட்டமாக பாலாற்று துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தல், புதிய தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையிலும், அவற்றைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரம் வழியாக தமிழகத்தில் பாயும் பாலாறு வட தமிழகத்தின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கியது. ஆனால், ஆந்திரத்தில் மொத்தம் 33 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியதால் தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணமாகும்.
எனவே, இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளையும், உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் அரசு தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.