தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் இருந்து விலக ஷீலா பாலகிருஷ்ணன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவி விலகல் கடிதத்தை அவர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனிடம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2011 -ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவர், ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். தலைமைச் செயலாளர்கள் தேவேந்திரநாத் சாரங்கி, மோகன் வர்கீஸ் சுங்கத், ஞானதேசிகன், ராம மோகன் ராவ் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கி அவர் செயல்பட்டு வந்தார்.
2016 -இல் அதிமுக தொடர்ந்து 2 -ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, ஷீலா பாலகிருஷ்ணனும் அரசு ஆலோசகராக நீடித்து வந்தார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் (மார்ச் 31) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் அவர் தாமாகவே முன் வந்து அரசு ஆலோசகர் பதவி இருந்து விலக முடிவு செய்து இருப்பதாகவும், அதற்கான கடிதத்தை தமிழக அரசிடம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.