3 அரசு செயலர்கள் விடுவிப்பும்... தமிழக அரசியல் வட்டாரத்தின் பரபரப்பும்...

தமிழக அரசின் 3 செயலர்கள் அவர்களின் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை

சென்னை: தமிழக அரசின் 3 செயலர்கள் அவர்களின் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஷீலா பாலகிருஷ்ணன், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து அரசு ஆலோசகராக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். அரசு நிர்வாகத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணனின் பதவி காலம் வரும் மார்ச் 31-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், அரசு ஆலோசகர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அரசுக்கு ஷீலா பாலகிருஷ்ணன் கடிதம் அளித்தார். தான் விலகுவதற்கான காரணத்தை அவர் அந்த கடிதத்தில் தெரிவிக்கவில்லை.

விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஷீலா பாலகிருஷ்ணன் தனக்கு தரப்பட்ட அரசு காரில் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அவரது அறையில் இருந்த பொருட்களை எடுத்துச்சென்றதாகவும், பின்னர் காரை அரசிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

1991-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்த வெங்கடரமணன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். 2002-ஆம் ஆண்டில் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வரின் செயலராக (3) பணிபுரிந்து வந்தார். 2012-ஆம் ஆண்டு ஏப்ரலில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு 5 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2016-ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல்வரின் செயலராக (1) பணியாற்றி வந்தார். அவரது பணி நீட்டிப்புக் காலம் ஏப்ரலில் நிறைவடைய உள்ளது. இந்தச் சூழ்நிலையில், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுடன் சேர்ந்தே, வெங்கடரமணனும் ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவர்கள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, முதல்வரின் மற்றொரு செயலராகவுள்ள (4) ஏ.ராமலிங்கமும், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 1996-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணியில் இணைந்தார். தற்போது 57 வயதாகும் அவர் மேலும் மூன்று ஆண்டுகள் வரை (60 வயது வரை) பணியில் இருப்பார். அவர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் பணி உத்தரவு வழங்கப்படும் எனவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, புதியதாக செயலர்கள் இரண்டு பேரும், அரசு ஆலோசகரும் நியமனம் செய்ய கோப்புகள் முதல்வரிடம் உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் நடைபெற்று வரும் பரபரப்புகள் மத்தியில், தமிழக அரசின் முக்கிய நிர்வாகப் பணியில் இருந்து வந்த 3 செயலர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பது, அரசு வட்டாரம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com