மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நலமாக உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி தொகுதியில் 15 -க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அன்புமணி வெள்ளிக்கிழமை (பிப்.3) கலந்து கொண்டார். ஓய்வின்றி தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் அவருக்குச் சோர்வும், லேசான தலைச்சுற்றலும் ஏற்பட்டது.
இதனையடுத்து பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதும், உடல்நிலை இயல்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து, அன்புமணி மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்புவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.