கடலில் எண்ணெய் அகற்றும் பணியை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பார்வையிட்டார்.
திருவொற்றியூர் பாரதி நகரில் கடலில் பரவிய எண்ணெய் அகற்றும் பணியை மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் சென்று பார்த்தார். அப்போது, மீனவர்ளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
கடலில் எண்ணெய் மிதப்பதால் மீன் வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழலும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
32 கிலோ மீட்டருக்கு எண்ணெய் படலம் பரவி இருக்கிறது. இதனால் நெமிலிச்சேரியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய - மாநில அரசுகள் நிபுணர் குழுவை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல், மீன் தொழில், எண்ணெயை அகற்றும் பணிக்கு ஆகும் செலவுகளை 2 கப்பல் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடாக பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது, எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு,கே.பி.பி.சாமி ஆகியோரும் உடன் சென்றனர்.
கனிமொழி: இதுதவிர, கடலில் எண்ணெய் பரவியுள்ள பகுதிகளை மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழியும் சனிக்கிழமை நேரில் சென்று பார்த்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் அரசு அதிகாரிகளுக்கும் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதனால்தான் பணியில் சுணக்கம் உள்ளது. விஞ்ஞானிகளோ, அனுபவம் மிக்க தொழில்நுட்ப வல்லுனர்களோ ஈடுபடுத்தப்படவில்லை. சாதாரண வாளிகள் மூலம் எண்ணெய் படலத்தை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.