பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
தமிழகத்துக்கு வரும் நதி நீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரமும், கேரளமும் தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டி வருகின்றன. இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 25 பேரையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 123 படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் பரவியுள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய பாஜக அரசு மக்கள் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை என்றார் அவர்.