முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமணத்துக்கு ஆறு மாதம் பரோல் கேட்டு சிறைத் துறையிடம் மனு அளித்துள்ளதாக அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி இருவரும் வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அவரது வழக்குரைஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்யக் கோரும் மனு மீதான இறுதி விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சாதகமாக அமையாத பட்சத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது விதியை பின்பற்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
தனது மகள் திருமணத்துக்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சிறைக் கண்காணிப்பாளர் மூலம் உயரதிகாரிக்கு கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நளினி மனு அனுப்பியுள்ளார். இவர்களது விடுதலைக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல தற்போதைய அரசும் எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகன், தனது மனைவி நளினியை அரைமணி நேரம் சந்தித்துப் பேசினார்.