இந்திய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக ரவி பச்சமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின்படி, செயல் தலைவராக பதவி வகித்து வந்த ரவி பச்சமுத்து, தற்போது தலைவராகத் தேர்வாகியிருக்கிறார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க முன் முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவசர சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவிப்பது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரண உதவிகளை வழங்குவதை முறைப்படுத்தி வழங்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுதிகளில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து கலந்தாலோசித்தல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, துக்ளக் ஆசிரியர் சோ, கட்சியின் வர்த்தக அணிச் செயலர் கே.டி. மனோகரன் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார். பொதுச் செயலர் வி.ஜயசீலன், இணைச் செயலர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, முதன்மை அமைப்புச் செயலர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கைபரப்புச் செயலர் எம்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.