அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரில் தலித் இளம்பெண் நந்தினி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் 10ஆம் தேதி அரியலூரில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நந்தினி குடும்பத்தினரைச் சந்தித்த பின்னர், மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்தில பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நந்தினியை போன்று பல பெண்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது பெண்கள் பாதுகாப்பு குறித்து 13 அம்ச திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது பேச்சளவில் மட்டுமே உள்ளது.
இன்றைக்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால், அவர்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழ்நிலையை அரசு உருவாக்கிவிட்டது.
நந்தினி கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரனைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட காவலர்களை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும். நந்தினி கொலை சம்பவத்தை கண்டித்து வரும் 10ஆம் தேதி திமுக சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
முன்னதாக அவர் நந்தினி குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர், மாநில இளைஞரணி துணைச் செயலர் சுபா. சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.