மக்களுக்காக அதிமுக ஆட்சி செயல்படும்: வி.கே. சசிகலா பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் மக்களுக்காக அதிமுக ஆட்சி செயல்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப் பேரவை குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவருமான வி.கே.சசிகலா கூறினார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்களுடன் பேசுகிறார்  சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட வி.கே. சசிகலா. உடன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்களுடன் பேசுகிறார் சட்டப்பேரவைக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட வி.கே. சசிகலா. உடன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் மக்களுக்காக அதிமுக ஆட்சி செயல்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப் பேரவை குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவருமான வி.கே.சசிகலா கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:-
எனது தாயாய், இதயமாய், தெய்வமாய் திகழும் ஜெயலலிதாவை வணங்குகிறேன்.
அவரது மறைவுக்குப் பின்னால் அதிமுகவில் விரிசல் விழாதா என கனவு கண்ட அரசியல் எதிரிகளின் எதிர்பார்ப்புகளை தூள் தூளாக நொறுக்கிக் காட்டிய அதிமுகவினருக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்பதை, தருணங்கள் எப்படி இருந்தாலும், சூழ்நிலைகள் எப்படி வந்தாலும், நாம் நிரூபித்துக் காட்டி வருகிறோம்.
கட்சிக்கு சோதனைகள் வந்த போதெல்லாம் கட்சித் தலைமைக்கு விசுவாசமாகத் திகழ்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா மறைந்து விட்டார் என்ற பேரிடர் விழுந்த போது நிலைகுலைந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் நானே (சசிகலா) பொறுப்பேற்க வேண்டும் என்று முதன் முதலில் வலியுறுத்தி வேண்டினார்.
ஆனால், அப்போது எதையும் ஏற்கும் மனநிலையில் இல்லை.
ஜெயலலிதா நம்மிடையே இல்லை என்ற சூழ்நிலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் கட்சியினர் வந்து சந்தித்தனர்.
அப்போது கட்சியினர் வலியுறுத்தியதன் அடிப்படையில், கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றேன்.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கட்சி என்றும் மக்களுக்காக உழைக்கும் என்ற ஜெயலலிதாவின் கனவை ஈடேற்ற, அதிமுகவினரின் கோரிக்கையை, வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டிóய கட்டாயம் இருந்தது.
அதேபோன்று இப்போதும் கட்சியின் பொதுச் செயலராகவும், முதல்வராகவும் ஒருவரே இருக்க வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி வந்ததன் விளைவாக கோரிக்கையையும் ஏற்கிறேன்.
ஜெயலலிதாவின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுவேன். அவரது வழியில் மக்களுக்காக இந்த ஆட்சி செயல்படும் என்றார் சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com