மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டின் போது காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை திங்கள்கிழமை பதிவு செய்தனர்.
மேலும், அலங்காநல்லூர் வருவாய்த்துறை அலுவலகம் அருகே முன்பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் உடற்தகுதி சோதனையும் நடத்தப்பட்டது.
இப்பணியை, வட்டாட்சியர் வீரபத்திரன், மண்டல துணை வட்டாட்சியர் வனிதா, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
இந்தாண்டு, மெகா பரிசாக கார், டிராக்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 1,490 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1,464 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு செய்யும் இடத்தில் அதிகளவில் கூட்டம் கூடியதால் போலீஸார் அவர்களை ஒழுங்குப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பணிகள் தீவிரம்: ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல், பார்வையாளர்களுக்கான காலரி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.