காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த ராணுவவீரர் திருப்பாண்டி (33) உயிரிழந்ததாக அவரது மனைவிக்கு ராணுவத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
கடலாடி தாலுகா ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த திருக்கண்ணன் மகன் திருப்பாண்டி. இவர் ராணுவ பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் காஷ்மீர் மாநிலம் நைஜர் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.
அண்மையில் பனிச்சரிவு ஏற்பட்டபோது திருப்பாண்டி தங்கியிருந்த இரும்புக் கூடாரத்தின் மீது பனிக்கட்டிகள் விழுந்துள்ளன.
இதில், திருப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். அவருடன் இருந்த மேலும் 4 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஏ.புனவாசலில் உள்ள திருப்பாண்டியின் மனைவி கனகவள்ளிக்கு ராணுவத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த திருப்பாண்டிக்கு மனைவி கனகவள்ளி, சத்யகாயத்ரி(5) என்ற மகளும் ஹரிஷ்பாண்டி(4) என்ற மகனும் உள்ளனர்.