நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த போஸ்பாறா பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த தாய் யானையையும், அதன் குட்டியையும் வனத் துறையினர் உயிருடன் திங்கள்கிழமை மீட்டனர்.
தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மச்சிக்கொல்லி தனியார் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டிற்கு உணவு தேடி குட்டியுடன், 20 வயது மதிக்கத்தக்க தாய் யானை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளது. அப்போது, அங்குள்ள பள்ளத்தில் தாய் யானையும், குட்டியும் தவறி விழுந்தன.
தகவலின் பேரில் வனத் துறை ஊழியர்கள் தாய் யானையையும், குட்டியையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் குட்டி யானை மீட்கப்பட்டு அருகில் இருந்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தாய் யானையின் கால்களில் கயிறு கட்டி மேலே இழுக்கப்பட்டது. இதையடுத்து, மேலே வந்த தாய் யானையும், குட்டியும் அருகிலுள்ள முதுமலை வனப் பகுதிக்குள் சென்றன.