சசிகலா முதல்வர் ஆக மக்கள் வாக்களிக்கவில்லை: மு.க. ஸ்டாலின்

சசிகலா முதலமைச்சர் ஆவதற்காக மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை. ஏன் அதிமுக தொண்டர்களே கூட அதற்காக வாக்களிக்கவும் இல்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சசிகலா முதல்வர் ஆக மக்கள் வாக்களிக்கவில்லை: மு.க. ஸ்டாலின்


சென்னை: சசிகலா முதலமைச்சர் ஆவதற்காக மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை. ஏன் அதிமுக தொண்டர்களே கூட அதற்காக வாக்களிக்கவும் இல்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த சில தினங்களாக அதிமுக அரசியலில் தோன்றிய புதுமுக “பொதுச் செயலாளர்” சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்துகள் தமிழகத்தின் பெருமையையும், தமிழக மக்களின் புகழையும் அகில இந்திய அளவில் - ஏன் உலக அளவில் கெடுக்கும் விதத்தில் அமைந்திருப்பது வேதனைக்குரியது.

“எனக்கு அரசியல் ஆசையே இல்லை” என்று கூறி, போயஸ் கார்டனில் மீண்டும் அடைக்கலம் தேடியவர் பிறகு திடீரென்று அக்கட்சியின் பொதுச் செயலாளரானார். அது அவர்கள் உட்கட்சி பிரச்னை என்று கருதினோம். ஆனால் இன்றைக்கு மாநில நலனுக்கு விரோதமாக, மாநிலத்தில் இருக்கும் நிலையான ஆட்சியை சீர்குலைக்கும் விதத்தில் ஒரு சுயநல திருவிளையாடலை நடத்தியிருக்கிறார் சசிகலா என்பதைக் காணும் போது “எல்லாம் பதவி படுத்தும் பாடு” என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்று சசிகலா நினைப்பதை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல - தமிழக மக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக மக்கள் கொதிநிலை அடைந்திருக்கிறார்கள்.

ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தலையங்கத்தில் “சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒரு வாரத்தில் வரவிருக்கின்ற நேரத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்கக் கூடாது” என்று  எழுதியிருப்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த தலையங்கத்தில், "உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலா பொறுமை காத்திருக்க வேண்டும்" எனவும், "முதலமைச்சராக பொறுப்பேற்று தீர்ப்பை எதிர்கொண்டால் நீதிமன்றத்தின் கடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்ற தவறான நம்பிக்கையில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டியிருப்பது தார்மீக நெறிகள் குறித்து கவலைப்படும் அனைவராலும் அச்சுப் பிசகாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

நிலையான ஆட்சியை ஒரே இரவில் "காபந்து சர்க்காராக" மாற்றியிருக்கின்ற சசிகலா முதலமைச்சராவதற்காக மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை. ஏன் அதிமுக தொண்டர்களே கூட அதற்காக வாக்களிக்கவும் இல்லை. ஜெயலலிதாவை  நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்திருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

இப்போது நிகழ்ந்துள்ளது போன்ற ஒரு சூழல் உருவாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் ஆரம்பம் முதலாகவே "முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர்  உத்தரவிட வேண்டும்" என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தேன்.  இன்றைக்கு முதலமைச்சர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்திலும், அவசரத்திலும் தமிழக ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைக்க சசிகலா நிகழ்த்தியுள்ள இந்த நாடகம் என் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்த்தியுள்ளது.

ஏற்கனவே மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 225க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். காவிரி பிரச்சினை, நீட் பிரச்சினை என்று விவசாயிகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி மாநிலம் பல்வேறு நிர்வாக சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் "காபந்து சர்க்கார்" தமிழகத்தில் இருப்பது மக்கள் நலனுக்கு விரோதமானது மட்டுமல்ல - முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறது.

இத்தகைய சூழலில், ஆளுநர் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சட்ட “வெற்றிடம்” பற்றி தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையின் பின்னனியில் “அடுத்து வரவிருக்கின்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு” மற்றும் “அமைய வேண்டிய நிலையான ஆட்சி"  ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு மக்கள் விரும்பும் நல்லதொரு முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com