சென்னை போயஸ் தோட்டப் பகுதியில் காவல் துறை மீண்டும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா இருந்தபோது, போயஸ் தோட்டப் பகுதியில் ஒரு உதவி ஆணையர் தலைமையில், 2 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி காவல் ஆய்வாளர்கள், 240 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவரது மறைவுக்கு பின்னரும், பாதுகாப்பு ஏற்பாடுகள் நீடித்ததற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால், போலீஸார் திரும்பப் பெறப்பட்டனர். அதன் பின்னர் தனியார் பாதுகாப்பு நிறுவனப் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க உள்ளதால், போயஸ் தோட்டப் பகுதியில் காவல் துறை மீண்டும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக திங்கள்கிழமை குவிக்கப்பட்டனர்.
மேலும், சசிகலாவைச் சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள் தவிர்த்து, மற்ற அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.