இடைக்கால பொதுச் செயலரை நியமிக்க அதிமுக சட்ட விதியில் வழியில்லை: தேர்தல் ஆணையம்
சென்னை: இடைக்கால பொதுச் செயலரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் அதிமுகவுக்கு விரைவில் அனுப்பப்பட இருப்பதாகவும் செய்தித் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து ஆராய்ந்த தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச செயலாளரை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலராக பதவியேற்க முடியும் என்ற விதியை நீக்கித்தான், சசிகலா இடைக்கால பொதுச் செயலராக பதவியேற்றார்.
ஆனால், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச செயலராக யாரும் பதவியேற்க வழி செய்யும் வகையில் விதி இல்லாததால், சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராக சசிகலா பதவியேற்பதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.