அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உங்களை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
மறைந்த தலைவர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது இந்த பொருளாளர் பதவி. ஜெயலலிதா என்னை புகழும் அளவுக்கு மன நிறைவுடன் பணியாற்றி உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலிடனும் சிரித்து பேசியதாக சசிகலா குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசமே சிரிப்பில்தான் உள்ளது. சிரிப்பது ஒரு தவறல்ல. என் மடியில் கனம் இல்லை. அதனால் எனக்கு பயம் இல்லை என்றார் அவர்.
மைத்ரேயன் ஆதரவு: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், பரிதி இளம்வழுதி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.