ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்: வி.கே.சசிகலா

ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள் என்று அதிமுக பேரவை உறுப்பினர்கள் குழுவின் தலைவர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்: வி.கே.சசிகலா

ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள் என்று அதிமுக பேரவை உறுப்பினர்கள் குழுவின் தலைவர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக பேரவை உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா தலைமையில் இன்று நடைபெற்றது. 

அப்போது பேசிய சசிகலா, 

என் தாயாய், என் இதயமாய், என் தெய்வமாய் திகழும் அம்மாவை வணங்குகிறேன். 33 ஆண்டு காலங்களில் எத்தனையோ நிகழ்வுகள், எத்தனையோ அதிர்ச்சிகள். அம்மாவை நோக்கி வந்த பல துரோகங்களை, அம்மா அவர்களோடு இணைந்து நானும் அவற்றை சந்தித்திருக்கிறேன்... அதையெல்லாம் வென்றிருக்கிறோம்; இதையும் வெல்வோம்.

அம்மா மறைந்த போது, இந்த கழக குடும்பத்தில் கலகம் வராதா என்று, கண்ணி வைத்து காத்திருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அம்மா கட்டிக்காத்த குடும்பத்தில் அன்புதான் மேலோங்கி நின்றது, கட்டுப்பாடுதான் ஓங்கி நின்றது.

திமுக-வின் சதித் திட்டத்திற்கு பலர் துணை போனார்கள்; பலர் புழுதி வாரித் தூற்றினார்கள். இப்போது ஒருவர், அம்மாவின் மறைவின் போது நான் எடுத்த முடிவு, அவர் முதல்வராக தொடர வேண்டும் என்று. அப்போது பலரும் ஓ. பன்னீர்செல்வம் உட்பட, என்னை பொறுப்பேற்கச் சொல்லி நிர்பந்தம் செய்தார்கள். அப்போது எதையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.

அதமுக அன்று பிளவுபட்ட நிலையில், மாற்று அணியில் இருந்து அவர் செய்த செயல்களை எல்லாம் கருணை உள்ளத்தோடு மன்னித்துதான் நம் அம்மா அவருக்கு வாய்ப்பு வழங்கினார்கள்.

பலமுறை அந்த வாய்ப்பைப் பெற்றார். அந்த வழியில் தான் நானும் செயல்பட்டேன். ஆனால், அதன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் நான் உற்று நோக்கிய நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளில்.... அம்மாவை அழிக்கத் துடித்த திமுக-வுடன் கழகத்திற்கு கேட்டையும், நாசத்தையும் விளைவித்த திமுக-வுடனான அவரின் செயல்கள், அம்மா எதற்காக போராடினாரோ, கடைக்கோடித் தொண்டர்கள் எதற்காகப் போராடினார்களோ அதனை ஈடேற்றும் விதத்தில் அமைந்திடவில்லை.

அம்மா இல்லாத இந்த நேரத்தில், முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டதால், அம்மா வகுத்த பாதையில் இருந்து விலகிட முடியாது. இங்கு முதல்வர் என்கிற சொல்லைக் காட்டிலும் அம்மா என்கிற சொல்லுக்கு மதிப்பு அதிகம். அம்மாவின் கனவுதான் நம் பார்வை. நான் அன்றே சொன்னேன், அம்மாவின் வழியில் தான் நம் பாதை.

அவர் காட்டிய பாதையில்தான் நமது பயணம் என்பதைச் சொன்னேன். இதைத் தாண்டி யார் நடந்தாலும், நடித்தாலும் அந்த நடையை, நடிப்பை, அதிமுக கண்டுபிடித்துவிடும். இத்தனை நாட்கள் வராத எதிர்ப்பு, நம் எதிரிகளிடமிருந்து புறப்படுகிறது என்றால் என்ன அர்த்தம். நம் எதிரிகள் விரும்பாதது இங்கு நடக்கிறது. அதனால் தான் இந்த சலசலப்பு. இதற்கெல்லாம் அதிமுகவும் அஞ்சாது, நானும் அஞ்சமாட்டேன்.

அம்மாவின் கனவுகளும், அவர் இதயத்தில் தாங்கிய கணலும் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும். அவை நிறைவேற்றப்பட வேண்டும். எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது. காரணம் அம்மா என்கிற சக்தி நம்மிடமுண்டு.

கடந்த 5-ம் தேதி நடந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் என்பது ரகசியக் கூட்டமல்ல. அது பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்த செய்திதான். அது, கடைசி நேரத்தில் தான் தனக்கு தெரிய வந்தது என்பது போன்ற ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்.

கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார், என்னை சட்டப்பேரவை குழு தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டுதான் இருந்தார். 48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யை சொல்கிறார் என்றால், அந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? யார் யாருடன் ஆலோசித்தார். திமுக-வைச் சேர்ந்த துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியது போல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசைகாட்டப்பட்டதா?

தமிழ் நாடு சட்டப்பேரவையில் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து துரைமுருகன் பேசும் போது, அதற்கு எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அப்போதே திரு. ஓ. பன்னீர்செல்வம் மவுனம் காத்த செயல், அவர் திமுக-வில் ஐக்கியம் ஆகிவிட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது. அவரின் இந்தச் செயலால், அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மிகுந்த கொதிப்படைந்தனர். அவருக்கு நெருடல் ஏற்படும் வகையில் அமைச்சர்களும், கழகத்தினரும் கருத்து தெரிவித்த வேளையில், என்னிடம் அதை அவர் சொன்ன போது, அதற்கு உரிய மதிப்பளித்து, அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், மற்ற கழகத்தினரிடமும், அவ்வாறு கருத்து சொல்ல வேண்டாம் என்று நான் கண்டித்தேன். 

ஓ. பன்னீர்செல்வம் கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கினேன். ஆனால், சட்டமன்றத்தில், திமுக மற்றும் முதல்வர் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை பரிமாற்றங்களில் இருந்த உள் அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை. அது, அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் தடுப்பது தான் பொதுச் செயலாளர் ஆன என்னுடைய கடமை. குழப்பத்தை ஏற்படுத்த திமுக எடுத்த முயற்சி இது என்பதை நேற்று பேட்டி கொடுத்த ஸ்டாலினின் அளவு கடந்த மகிழ்ச்சி, அதை உண்மை ஆக்கிவிட்டது.

துரோகங்கள் ஒரு போதும் வென்றது கிடையாது. அதுவும் அதிமுகவை என்றும் வெல்லவே முடியாது. இத்தனை காலம் அம்மாவிற்காக வாழ்ந்தேன். இனி, அம்மாவின் கனவுகளுக்காக வாழ்வேன். அதே முடிவைத் தான் நீங்களும் எடுத்துள்ளீர்கள். இந்த லட்சியப் பயணத்தில் என்னோடு பயணிக்கும் அம்மாவின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

நம் எதிரிகள், அவர்களின் சுயரூபத்தைக் காட்டுகிறார்கள். நாம் யார் என்று அவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவோம். நம்மை பிரிக்கும் சக்தி; நம்மைக் பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன்.

அதிமுகவின் விரோதிகள் வரிந்துகட்டி வருகிறார்கள்; துரோகத்தின் வடிவத்திலும் வருகிறார்கள். கழகம் அதற்கு அஞ்சாது. நம் புரட்சித்தலைவர் சொன்னது போல, அச்சம் என்பது மடமை, அஞ்சாமை திராவிடர் உடமை, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, நம் தாய் கட்டிக் காத்த கழகத்தைப் பாதுகாப்பது நமது கடமை.

துரோகமும் - விரோதமும் கைகோர்த்து வந்தாலும் அவை தோற்று ஓடும்; தோற்க வைப்போம். இது சத்தியம். நம் புரட்சித் தலைவி அம்மா மீது சத்தியம் என்று கூறி, அண்ணா நாமம் வாழ்க ! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! புரட்சித் தலைவி அம்மாவின் புகழ் என்றென்றும் ஓங்குக! நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com