கடலூர் : வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் 146வது தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகளால் வடலூரில் சத்திய ஞானசபை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான 146-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, இன்று காலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. பிறகு ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளை காலை 6 மற்றும் 10 மணிக்கும், மதியம் 1 மணிக்கும், இரவு 7 மற்றும் 10 மணிக்கும், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கும் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது.