சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி இளைஞர்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று திரைப்பட நடிகர் சூர்யா வலியுறுத்தினார்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "சிங்கம்-3' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டு நிகழ்ச்சியில், அவர் மேலும் பேசியது:
தமிழ் திரை உலகிற்கு திருட்டு விசிடி பெரும் சவாலாக உள்ளது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இப்பிரச்னை இல்லை. ரூ. 18 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறக் கூடியது, திரைத்துறை. இதில் மத்திய, மாநில அரசுகளின் வரி நீங்கினால், தயாரிப்பாளருக்கு மிகக் குறைவான தொகைதான் சென்று சேரும். இதனால், ஓரிரு திரைப்படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்களால் நிலைத்து நிற்க முடிவதில்லை. ஆனால், திருட்டு விசிடி தொழில் ரூ. 23 ஆயிரம் கோடிக்கு நடந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு வரிவிதிப்புக்கும் உட்படாமல் இருக்கும் இந்த தொழிலை மக்கள் ஆதரிக்கக் கூடாது. பெரும் திருட்டுக்கு நாமும் உடந்தையாக இருந்து விடாமல், திரையரங்குகளுக்கு நேரில் வந்து திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். திருட்டு விசிடியை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
மண்ணின் வளத்தையும், நிலத்தடி நீரையும் கெடுக்கும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு ஒழிக்க வேண்டும். இப்போது அனைத்து மாவட்டங்களிலும் அரசால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சீமைக் கருவேல மரங்கள் ஒழிக்கும் பணி இளைஞர்கள் இயக்கமாக மாற வேண்டும். கேரளத்தில் சீமைக் கருவேல மரங்களை ஒழித்து விட்டனர். அதேபோல, தமிழகத்தையும் சீமைக் கருவேல மரங்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
திரைப்பட இயக்குநர் ஹரி, மதுரை ராமநதாபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கப் பொதுச் செயலர் சாகுல் அமீது, மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துக் கிருஷ்ணன், திரைப்பட விநியோகஸ்தர்கள் சிவக்குமார், குணசேகரன், ராஜமன்னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.