தஞ்சாவூர் மாவட்டத்தில், மர்ம காய்ச்சலால் மேலும் ஒரு பெண் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அ. நாகராஜன் (59) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்தார்.
இதே மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட கும்பகோணம் செட்டிமண்டபத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (54) திங்கள்கிழமை இறந்தார்.
இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த மலர்ராஜன் மனைவி கவிதா (45) தொடர் காய்ச்சலால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார். இவர் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
பாலகிருஷ்ணன், கவிதாவின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்தபிறகே அது எந்த வகையான காய்ச்சல் என்பது தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.