மர்மக் காய்ச்சல்: மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் திருவள்ளூர் அரசுப் பொதுமருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்
பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மர்மக் காய்ச்சலுக்கு 20-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதையடுத்து கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் தொடர்ந்து அடிக்கப்பட்டும், நில வேம்புக் குடிநீர் அளித்தும் மர்மக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்
பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் மர்மக் காய்ச்சல் பரவி உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் காய்ச்சல் பாதித்த 3 பேர் இறந்துள்ளனர்.
தற்போது திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சேர்ந்த குமரேசன், திருநின்றவூரைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய இருவரும் சளி மற்றும் காய்ச்சலால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.